Share via:
தஞ்சாவூரில் மீண்டும் மங்கி குல்லா கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த மங்கி குல்லா கொள்ளையர்களின் அட்டகாசம் சமீப காலமாக மீண்டும் அதிகரித்துள்ள அம்மாவட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவென்யூ நகரைச் சேர்ந்த இந்திராணி என்ற 50 வயது பெண் தனது கணவர் உயிரிழந்த நிலையில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டின் முன்பு விளக்கேற்றிக் கொண்டிருந்த இந்திராணி, அங்கு மங்கி குல்லா அணிந்திருந்த கொள்ளையன் வீட்டின் பின்பக்கம் இருந்த கம்பி வேலியை பெயர்த்துக் கொண்டு உள்ளே வருவதை பார்த்து அலறி கூச்சலிட்டார். இதைபார்த்த 2 மகள்களும் பயந்து போய் கூச்சலிடத் தொடங்கினார்கள்.
அப்போது மங்கி குல்லா அணிந்த கொள்ளையன், இந்திராணி கழுத்தில் கத்தியை வைத்து அவர்கள் 3 பேரும் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டிருப்பதை பார்த்த பக்கத்து வீட்டு பெண்கள் தங்கள் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியுள்ளனர்.
ஆனால் மற்றொரு கொள்ளையன் பக்கத்து வீட்டிற்குள் நுழைய பார்த்த போது, அங்கிருந்த மூதாட்டி கொள்ளையனை வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் அவர்களது நகைகள் தப்பியது. இதைத்தொடர்ந்து எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த மங்கி குல்லா கொள்ளையன் ஒருவன், தனது குல்லாவை அவிழ்த்து கதவில் இருந்த கைரேகையை அழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
இந்த பரபரப்பு காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து மங்கி குல்லா கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மங்கி குல்லா கொள்ளையர்களை விரைவில் போலீஸ் பிடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.