Share via:
பருத்திவீரன் பிரச்சினை தொடர்பாக அமீர் குறித்து பேசியதற்கு மனப்பூர்வமாக தான் மன்னிப்புக் கேட்பதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக யூடியூப் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் குறித்து செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருந்தன.
பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி வந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் மொத்த குடும்பத்தின் தலையும் உருள ஆரம்பித்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பருத்திவீரன் தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை நான் அதை பற்றி பேசியது கிடையாது. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் நான் மிகவும் மதிக்கிறேன். நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தொடர்ந்து ஞானவேல் ராஜா, அமீருக்கு இடையில் நடந்து கொண்டிருந்த வார்த்தை போர் முடிவுக்கு வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.

