Share via:
தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து தே.மு.தி.க.வின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி படகில் சென்று மக்களை மீட்டு வருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி தே.மு.தி.க.வின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (டிச.20) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்களிடம் கலந்துரையாடி பின்னர் திருநெல்வேலி டவுன் பகுதிக்கு சென்ற பிரேமலதா விஜயகாந்த், 5,000 பேருக்கு பிரியாணி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், பெட்சிட் உள்ளிட்ட தேவையான பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் உடன் இருந்தனர்.