Share via:
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து அடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் இன்று காலை நிலவரப்படி 24 அடி உயரம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 22.53 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 அடி உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், அது 200 கன அடியாக நேற்று முன்தினம் (நவ.28) காலை அதிகரித்தது. நேற்று காலை 9 மணி முதல் இந்த அளவு வினாடிக்கு 1,000 கன அடிநீராகவும், பின்னர் 2,500 கன அடி நீர் அளவுக்கும் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, காவனூர் பகுதி குடியிருப்புப் பகுதி மக்களுக்கும், அடையாறு கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.