Share via:
காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்துவிட்டு, எங்களுக்குக்
குறைவாகக் கொடுக்க முடியாது என்றெல்லாம் வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசின.
இந்த நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் தான் தொகுதிகளை குறைத்துக்
கொள்ள ஒப்புக்கொண்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வீரபாண்டியன்
கூறி கையெழுத்து போட்டுவிட்டார்.
திமுகவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு
4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய
மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு
ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு இறுதியானதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த
மு.வீரபாண்டியன், “கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும்
என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரியண்ணன் மனப்பாண்மையில் திமுக ஒருபோதும் நடந்தது இல்லை. தொகுதிப்
பங்கீடு விவகாரத்தில் திமுக நிர்பந்திக்கவில்லை. கட்டளையிடவில்லை. அழுத்தம் தரவில்லை.
மாறாக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள
கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில்
ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ஓரணியில் சேர்ந்துள்ளோம்.”
என்றார்.
தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே மூன்று முறை பேச்சு
வார்த்தை நடந்தும் தோல்வில் முடிந்த நிலையில்தான், மு.க.ஸ்டாலினே நேரடியாக பேசிய நிலையில்,
தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது.
கடந்த முறை தேர்தல் செலவுக்கு 25 கோடி
பெற்றனர், இம்முறை 50 கோடி என்று பேசப்பட்டதாலே இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாக
சொல்லப்படுகிறது.
இது உண்மையா என்பதை கம்யூனிஸ்ட் கட்சிதான் சொல்ல வேண்டும்.
