Share via:
விஜய் நடிப்பில்
வெளியாகியிருக்கும் கோட் படம் சூப்பர் ஹிட் வெற்றி அடையவில்லை என்று வருத்தத்தில் இருக்கும்
அவரது ரசிகர்கள் இப்போது அரசியல் உற்சாகத்துக்கு மாறிவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருப்பதற்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.
இன்று விஜய் வெளியிட்டுள்ள
அறிக்கையில், ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம்
அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும்,
அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது
அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தை
அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல்
ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின்
தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு
செய்து, தேர்தல் அரசியலில்,பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.
இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திசைகளை வெல்லப்
போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில்,
நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள
நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை
காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக
மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி
மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்’’ என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து விஜய்
ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம், இன்னமும் மாநாட்டுக்கு முறைப்படி
அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு நடப்பதாகத் தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம்
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த கட்சி தலைமை முடிவு செய்தது. இதற்கு அனுமதி கேட்ட நிலையில்,
21 கேள்விகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை எழுப்பபி இருந்தது.
காவல்துறையின் கேள்விகளுக்கு
தமிழக வெற்றிக் கழகம் பதில் அளித்துவிட்ட நிலையிலும், இதுவரை காவல் துறை அனுமதி வழங்கவில்லை. புஸ்ஸி ஆனந்தை நேரில்
வரவழைத்துப் பேசி சந்தேகம் தீர்க்கப்பட்ட பிறகே முடிவு எடுக்கப்படும் என விழுப்புரம்
மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
மாநாட்டு ஏற்பாடுகளை
விஜய் சிறப்பாகச் செய்துவிடக் கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் வேண்டுமென்றே இந்த இழுத்தடிப்பு
வேலைகள் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.