Share via:
பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்த மணிகண்டன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யூடியூபர் டி.டி.எப். வாசனின் விசிறி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருச்சியில் இளைஞர்கள் சிலர் அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அதிவேகமாக வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு கெத்து காட்டி திரிந்து வந்துள்ளனர். இது குறித்த பல முறை போலீசார் எச்சரிக்கை விடுத்தும் இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் சாகசத்திலேயே முழு கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது இளைஞர்கள் சிலர் பட்டாசுகளை தங்களது பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை வெடிக்க செய்து நெடுஞ்சாலையில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்த போலீசார் இது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ, வீடியோவில் இருப்பது யார் என்று விசாரணை நடத்தியதில் அஜய், பாஷா, ராஜேஷ், பர்ஷத் அலி, அஜித், சக்திவேல், விஜய், வசந்தகுமார், அருள்முருகன், பெருமாள், கிரீஷ்குமார், அஜித்குமார் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இதில் மணிகண்டன் என்ற இளைஞர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் போலீசில் சிக்கிய மணிகண்டன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீலிங் சாகசம் செய்து சிறை சென்ற பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசனின் விசிறி என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.