Share via:
ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல்ஹக்கை கட்டியணைத்து கைகொடுத்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்த விராட் கோலியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது பெங்களூர் அணியைச் சேர்ந்த விரோட் கோலியும், லக்னோ அணியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் மோதிக் கொண்ட சம்பவம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாகத்தான் இருக்கிறது. இந்த மோதலின் போது முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் ஈடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக நவீன் உல் ஹக், விராட் கோலியை சீண்டும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நவீன் உல் ஹக் எந்த மைதானத்தில் காலடி எடுத்து வைத்தாலும் ‘கோலி… கோலி’ என்ற ஆரவாரக் குழல் ஒலிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் நேற்று ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியின் போது எப்போதும் போல ரசிகர்கள் நவீன் உல் ஹக்கை கேலி செய்யும் விதமாக அவர் மைதானத்தில் நுழைந்ததும் ‘கோலி கோலி’ என குரல் எழுப்பினார்கள். உடனே கோலி தனது ரசிகர்களை பார்த்து வேண்டாம். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள் என வேண்டுகோள்விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அமைதியாக இருந்தனர்.
இதனை கவனித்த நவீன் உல் ஹக் சிறிது நேரம் கழித்து விராட் கோலிக்கு கைகொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட விராட் கோலி, நவீன் உல் ஹக்கை ஆரத்தழுவி நட்பாக பழகினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக்கி வரும் விராட் கோலி ரசிகர்கள், அவரை புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். எப்படியோ ஐ.பி.எல். மோதல் இப்போதாவது முடிவுக்கு வந்ததே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர். இந்தியர்களுக்கு எப்போதுமே பெருந்தன்மை இருப்பது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது நேற்றைய இந்த நிகழ்வு.

