Share via:
பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே சென்னை& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மோட்டார் சைக்கிளில் தனக்கு தானே விபத்தும் காயமும் ஏற்படுத்திக் கொண்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதன்படி கடந்த மாதம் 19ம் தேதி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் டி.டி.எப். வாசன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 4ம் தேதி (அக்.) நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு முன்பு, பல முறை தனக்கு ஜாமீன் வேண்டும் என்று டி.டி.எப்.வாசன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.
அதேபோன்ற ஜாமீன் மனுவில் நீதிமன்றம் டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், அவரது பைக்கை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் காட்டமாக தன்னுடைய கருத்தை தெரிவித்து ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர், டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக அறிவித்தார். அதன்படி 2033ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
