Share via:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற
உள்ள நிலையில் பணப் பரிமாற்றத்தை தி.மு.க. ஆரம்பித்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியினர்
கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கிறார்கள். வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
வேலையில் சீமான் ஆட்கள் இறங்கிவிட்டதாக தி.மு.க.வினர் ஆவேசம் காட்டுகிறார்கள்.
இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை
எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
விஜய் கட்சியும் களம் இறங்கவில்லை. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமாரும்
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார். நாளையுடன் தேர்தல்
பிரசாரம் முடிவுக்கு வருவதால் கடைசி நேர பிரசாரம் இப்போது அனல் பறக்கிறது.
நாம் தமிழர் கட்சி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்துப்
பேசும் நாம் தமிழர் கட்சியினர், ‘’ஈரோடு ழக்கு
இடைத்தேர்தலில் வீதி தோறும் பணப் பட்டுவாடா தங்கு தடை இன்றி நடைபெறுகிறது மக்கள் நியாய
விலைக் கடையில் வரிசையில் நின்று அரிசி பருப்பு வாங்குவது போல் பணத்தை வாங்கி செல்கிறார்கள்
இதற்கு எதற்காக தேர்தல் நடத்த வேண்டும் பேசாமல் தொகுதியை ஆளுங்கட்சிக்கு ஏலம் விடலாம்’’
என்று கொந்தளிக்கிறார்கள். இந்நிலையில் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது
அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின்
கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று தேர்தல் பார்வையாளர்களிடம்
கேட்டோம். ‘’கடந்த தேர்தலில் அத்தனை அமைச்சர்களையும் தேர்தல் களத்தில் தி.மு.க. இறக்கியது.
இப்போது கடும் போட்டி இல்லை என்பதால் முத்துச்சாமியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.26 லட்சம்.. முழுக்க முழுக்க
நகர்ப்புறம் சார்ந்த பகுதி. இங்கு செங்குந்த முதலியார், இஸ்லாமியர், அருந்ததியர், கிறிஸ்தவர்,
கொங்கு வெள்ளாளக் கவுண்டர், செட்டியார், ஆதிதிராவிடர், நாடார், தேவர், தேவந்திரகுல
வேளாளர், வேட்டுவக் கவுண்டர், முத்துராஜா, பிள்ளைமார் வரிசைப்படி எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
இவர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் ஜவுளி தொழிலில் ஏதேனும்
ஒரு வகையில் ஈடுபடுபவர்கள். நூல் விலையை ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியதும், ஜவுளி சார்ந்தவற்றிற்கு
அதிகபட்சமான ஜிஎஸ்டி வரி விதித்ததும், உற்பத்தியாளர்களையும், உழைக்கும் மக்களின் வாழ்க்கை
தரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஆளும் கட்சியின் மீது மிகப்பெரும் அதிருப்தி இங்கு
இல்லை. பெரிய கட்சிகள் போட்டியிட்டால் இரண்டு பக்கமும் பணம் கிடைத்திருக்கும். அப்படி
போட்டி இல்லை என்றாலும் தி.மு.க. வாக்குக்கு 500 ரூபாய் கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்
இளங்கோவன் 66 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 1,10,156 வாக்குகள் வாங்கி
வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர்
கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த்
1,432 வாக்குகளும் பெற்றனர்.
சீமான் பரப்புரை வேகமாக இருக்கிறது என்றாலும் பெரியாரைச் சுற்றியே
இருப்பது இங்கு எதிர்வினையாற்றவே வாய்ப்பு அதிகம். இந்த முறை சீமான் கண்டிப்பாக அதிக
வாக்குகள் வாங்குவார் என்றாலும் டெபாசிட் தேறுவது கஷ்டம் என்பதே இன்றைய நிலவரம். அ.தி.மு.க.வினரும்
பா.ஜ.க.வினரும் கடைசி நேரத்தில் கை கொடுப்பார்கள் என்று சீமான் நம்புகிறார். ஓட்டுப்
போடுவதைப் புறக்கணிக்காமல் பூத்துக்கு எதிர்க்கட்சியினர் வந்தால் மட்டும் சீமானுக்கு
டெபாசிட் தேறும், இல்லையெனில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஓட்டுகள் வாங்கலாம். தி.மு.க.
மீண்டும் ஒரு அமோக வெற்றி பெறுகிறது.