Share via:
சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்
அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும்
6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி
நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன்
சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.
இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை
இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட
10 மாநிலங்களில் உள்ள 37 இடங்கள் காலியாகின்றன. இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு
செய்ய மாநிலங்களவை தேர்தல் வரும் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – மார்ச்
6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9. போட்டி இருந்தால்
வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தற்போது தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில்
திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் இந்த சீட்டுக்குக் கூட்டணியில் பெரிய நெருக்கடி
எதுவுமில்லை. கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என்று
சொல்லப்படுகிறது. அதனால் அந்த சீட்டுக்கு பலரும் முட்டிமோதுகிறார்கள்.
அதேநேரம், அதிமுகவில் கடுமையான போராட்டம் நடக்கிறது. தம்பிதுரை
மீண்டும் எம்.பி.யாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே அவருக்கு கொடுக்கப்படும்
என்றே தெரிகிறது. இதில், ஜி.கே.வாசனும் மீண்டும் பதவிக்குத் துடிக்கிறார். அதேநேரம்
அன்புமணி, பிரேமலதா ஆகியோரும் இந்த ஒத்த சீட்டுக்கு
குறி வைக்கிறார்கள். ஆக, பெரும் போட்டி காத்திருக்கிறது.
