Share via:
தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடந்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டதன் தொடர்ச்சியாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் ஐதராபாத்தில் எஸ்.ஆர்.நகரில் தனது வாக்கைபதிவு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தெலுங்கானாவில் அமைதியான முறையிலும், விறுவிறுப்பாகவும் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொருவரும் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.