Share via:
மறைந்த தலைவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த அண்ணாமலையை பா.ஜ.க. கண்டிக்கத் தவறியதை கண்டித்து பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியாக இணைந்து கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தர்தல்களை சந்தித்தன. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமரியாதையாக பொது வெளியில் பேசியுள்ளார். இது குறித்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கறாராக கூறிவிட்டார். இதனால் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான விரிசல் அதிகரித்தது.
இதற்கிடையில் வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த விரிசல் எதிரொலிக்கும் போக்கும் இருந்தது. அந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். அதை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவையும் சந்தித்து பேசினர்.
அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு இடையிலான பூசல் போஸ்டர் வரை சென்றதால் வெறுத்துப் போன அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி, மாவட்ட செயலாளர்களுக்கு இனி பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுத்தார். அதில், ‘‘2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அ.தி.மு.க. இன்று (செப்.25) முதல் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகுகிறது. இந்த முடிவு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு. இந்த தீர்மானத்தை ஒருவர் கூட எதிர்க்காமல் 100 சதவீதம் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘‘நன்றி மீண்டும் வராதீர்கள்’’ என்று ஹேஷ்டேக்குடன் பதிவிட்டது பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆடிப்பாடியும் கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.