Share via:
தில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கை தேர்ந்தவர்கள் எனவே,
வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த விழிப்போடு கண்காணிக்க வேண்டுமென அதிமுக மற்றும்
கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கை
நடைபெறும் நாளான 4.6.2024 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும்
நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள்
மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு
ஒரு மணி நேரம் முன்பாகவே, தேர்தல் நடத்தும் அலுவலரால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்
அடையாள அட்டையுடன் (Identity Card) வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் காலதாமதமாக செல்லக்கூடாது.
* வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகளுக்கேற்றார்போல்
வாக்கு எண்ணும் முகவர்களை நாம் நியமித்திருக்கிறோம். அந்த முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற
நாற்காலிகளில் முதலில் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே
சென்றவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிற வரை எக்காரணம்
கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது. மிகுந்த கவனத்தோடு
வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும்
முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில்
வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
* வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், ஏற்கெனவே
படிவம் 17C-ன் படி வாக்குப் பதிவு நாளன்று பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் சரியாக உள்ளதா
என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள், ஒவ்வொரு சுற்று முடிவிலும்
அறிவிக்கப்படும் போதும், நீங்கள் குறித்து வைத்திருக்கிற வாக்குகள், தேர்தல் நடத்தும்
அலுவலரால் சரியாக அறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமுடன் பார்க்க வேண்டும்.
* ஏதேனும், மாறுதல்கள் இருக்கிற பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையை
தொடராமல் தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலே தெரியப்படுத்த வேண்டும். உங்களுக்கு வருகிற
ஐயங்களை வாக்கு எண்ணும் மையத்தின் பிரதான மேஜையின் முன் அமர்ந்திருக்கிற வேட்பாளரின்
தலைமை முகவரிடத்திலே தெரியப்படுத்தி, அதை எழுத்துப்பூர்வமாக வேட்பாளரின் சார்பாக தேர்தல்
நடத்தும் அலுவலரிடத்திலே கொடுத்து அதற்குண்டான ஒப்புகையை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும்.
அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக்
கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து,
குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை
காண வேண்டும்.
திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும்,
வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும்.
இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே,
வாக்கு எண்ணும் மையங்களில் திமுக-வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை
மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால்,
அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.
* கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் (Counting Agent) அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை
மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட
பின்னர் தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும்.
* கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும்
வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent-களும், தங்களுக்கான
வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்புணர்வோடு
கண்காணிக்க வேண்டும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை உறுதி
செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும்
விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும்
ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
40 தொகுதியிலும் ஜெயிக்கப் போகிறவர் மாதிரியே பில்டப் கொடுத்திருக்கிறாரே
என்று தி.மு.க.வினர் கிண்டல் செய்துவருகிறார்கள்.