Share via:
பிரதமர் மோடி தமிழகம் வந்துசென்றதும் டெல்லிக்குப் போயிருக்கிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதாக சொல்லப்பட்டு
வந்தாலும், உண்மையில் அமைச்சர் நேரு கைது தொடர்பாக அழுத்தம் கொடுக்கவே இந்த சந்திப்பு
என்று சொல்லப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து இந்திய
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அரசியல் கட்சிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தமிழக சட்டப்பேரவைத்
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டே எழுச்சிப்பயணம் தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர்,
3 கட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், மதுரையில் கடந்த
ஞாயிறு நடைபெற்ற தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தின் முடிவில், கூட்டணி தலைவர்கள் கூட்டம்,
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், பழனிசாமி முன்னிலையில் அன்று இரவு நடைபெற்றது.
அதில் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொகுதி பங்கீட்டை,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கலந்தாலோசித்து இறுதி செய்வதற்காக பழனிசாமி
டெல்லி சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ்
அதிகாரிகள் பட்டியல் ஒன்றை அமித் ஷாவிடம் பழனிசாமி வழங்கியதாக சொல்லப்படுகிறது. இவர்களை தேர்தல் பணியில் ஈடுபடாத துறைக்கு இடமாற்றம்
செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதோடு, அமைச்சர்
நேரு மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து தேர்தல் நேரத்தில் சிறையில் இருப்பதற்கு
வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்,
‘’தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்கள் கூட்டணி சுமுகமாக இருக்கிறது. எதைப்
பற்றியும் கவலைப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் இருப்பதை
பத்திரிகை, ஊடகங்களிலும் வரும் செய்தியை வைத்து கணிக்க முடிகிறது. அந்த கூட்டணியில்தான்
பிரச்னை இருக்கிறதே ஒழிய, அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றாக இருந்து மிகச் சிறப்பாக
செயல்பட்டு வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட
பிறகே தொகுதி உடன்பாடு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் இது அமைச்சர் நேருக்காக மட்டுமே நடந்த சந்திப்பு
என்றே தெரிகிறது. விரைவில் முடிவு தெரிந்துவிடும்.
