Share via:
ஸ்டாலினை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். ஆளும் தி.மு.க. அரசின்
அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்று சமூகவலைதளங்களில் பேசியதால்
காவல் துறை மூலம் குண்டர் சட்டம் போடப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்
சவுக்கு சங்கர். இப்போது மீண்டும் அவரை குறி
வைத்து காவல் துறை பழிவாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
சவுக்கு சங்கரது பதிவில், ‘’பழிவாங்கும் போக்கில் அதிகார துஷ்பிரயோகம்
செய்யும் அருண். கட்டுப்பாடிழந்த முதல்வர். கும்பமேளாவில் படபிடிப்பு நடத்துவதற்காக,
சவுக்கு மீடியா கேமராமேன்களோடு சாலை மார்க்கமாக இன்று காலை சென்னையிலிருந்து கிளம்பினோம்.
ஐதராபாத் தாண்டி, ராமையாபேட்டையில் ஒரு கடையில் மாலை 6 மணிக்கு தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது,
தெலுங்கானா காவல்துறை வாகனம் வந்து, எனது வாகனத்தின் எண்ணை சொல்லி, காவல் நிலையம் வருமாறு
அழைத்தனர்.
எதற்கு என்று கேட்டபோது, உங்கள் வாகனத்தை நிறுத்தி பறிமுதல் செய்யுமாறு
சென்னை காவல்துறையிலிருந்து எங்களுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. உங்கள் புகைப்படம்
அனுப்பப்பட்டுள்ளது என்று வாட்ஸப்பை காண்பித்தனர். அதில் எனது புகைப்படமும் எனது ஓட்டுனர்
புகைப்படமும் இருந்தது. உடனடியாக என்னை காவல்துறை வாகனத்தில் ஏற்றி, வாகனத்தை காவல்துறை
ஓட்டுனர் எடுக்க ராமையாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எங்கள்
போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்நிலையம் சென்றதும் நீங்கள் என்ன குற்றம்
செய்தீர்கள் உங்களை சென்னை காவல்துறை தேடுகிறது என்று கேட்டனர்.
நீங்கள்தான் அழைத்து வந்தீர்கள். அதை நீங்கள்தான் கூற வேண்டும்
என்றதும், எங்களுக்கு, உங்களையும் உங்கள் வாகனத்தையும் இந்த இடத்தில் தடுத்து நிறுத்த
வேண்டும் என்று லொக்கேஷனோடு தகவல் வந்தது. அதனால் நிறுத்தினோம் என்று கூறி விட்டு,
வாகனத்தில் மது இருக்கிறதா, போதைப்பொருள் இருக்கிறதா என்று இஞ்சின் வரை சோதனை செய்தனர்.
எங்களையும், வாகனத்தையும் புகைப்படம் எடுத்து யாருக்கோ அனுப்பினர். எதுவுமே இல்லாததால்,
இருங்கள், என்ன விபரம் என்பதை கேட்டு விட்டு அனுப்புகிறோம் என்று ஆய்வாளர் கூறினார்.
பிறகு நான் ஒரு பத்திரிக்கையாளன், அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது பல வழக்குகள்
போடப்பட்டன என்பதை விளக்கினேன்.
சவுக்கு மீடியா யுட்யூப் சேனலை திறந்து காண்பித்தேன். என் மீதான
வழக்கு பற்றிய செய்தி இணைப்புகளை அவர் போனிலேயே காண்பித்தேன். பிறகு அவர் தெலுங்கானா
மாநிலம் முழுவதும் உங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தும்படி உத்தரவு சென்றுள்ளது என்று
கூறினார். கொஞ்ச நேரம் காத்திருங்கள் என்று கூறி, இரண்டு மணி நேரம் கழித்து, வாகனத்தில்
pollution சான்று இல்லை என்பதற்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்த போனை கொடுத்து நீங்கள்
செல்லலாம் என்று அனுப்பி வைத்தனர்.
அந்த ஆய்வாளர் சொன்னபடியே, அடுத்து வந்த சுங்கச்சாவடியில் வாகனம்
தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையிடம் போன் செய்து விசாரித்த பின்பே செல்ல அனுமதித்தனர்.
பின்னர் வெளியே வந்து சென்னை காவல்துறையிலிருந்து யார் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது
என்று விசாரித்தபோது, அருண் ஐபிஎஸ் 24 மணி நேரமும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு
இருக்கிறார். எப்படி அடுத்த வழக்கில் கைது செய்யலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
உங்கள் போனும், உங்கள் ஓட்டுனர் போனும் லொகேஷன் கண்காணிக்கப்படுகிறது என்றும், டோல்
ப்ளாஸா மூலமாக உங்கள் வாகனம் கண்காணிக்கப்படுகிறது என்றும், இதற்கான உத்தரவை பிறப்பித்தது
அருண் என்றும் கூறினர்.
ஏற்கனவே காவல் துறையின் ஈரல் முழுமையாக அழுகி விட்டதாக எதிர்க்கட்சிகள்
குற்றம் சுமத்தி வரும் நேரத்தில், அருண் போல ஒரு அதிகாரி, இப்படி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம்
செய்வதை அனுமதிக்கும் முதல்வர் ஏன் “பொம்மை முதல்வர்” என்று அழைக்கப்படுகிறார் என்பது
தெரிகிறதா ? ஆட்சிக்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தும் ஒரு அதிகாரியை மாற்றக் கூட
துணிவற்று, திறனற்று இருப்பதால்தான் அவர் “பொம்மை முதல்வர்” என்று அழைக்கப்படுகிறார்.
இத்தகைய அதிகாரிகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு 2026ல் தோல்வியை பெற்றுத்
தராமல் இந்த அதிகாரிகள் ஓயப்போவது இல்லை.
ஆட்சியை இழந்தபின் முக.ஸ்டாலின் யோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
அருண் போன்ற அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டியது. அருணை விட பல மடங்கு திறமையான ஜாபர்
சேட் போன்ற அதிகாரிகளே மண்ணைக் கவ்வியிருக்கின்றனர். அவருக்கு இருக்கும் அறிவில்
10 சதவிகிதம் கூட இல்லாத அருண் போன்றவர்கள் அழிவை நோக்கி பயணிக்கிறார்கள். அறிவிருக்கும்
அதிகாரிகளே வீழ்ந்திருக்கிறார்கள். அறிவே இல்லாமல் ஆணவம் மட்டும் இருக்கும் அருண் போன்ற
அதிகாரிகளின் வீழ்ச்சி மோசமானதாக இருக்கும். எப்படியாவது சவுக்கு மீடியாவை நிறுத்த
வேண்டும் என்பதற்காகவே அருண் 24 மணி நேரமும் இதே சிந்தனையில் இருக்கிறார். நான் எங்கே
செல்கிறேன், என்ன உண்கிறேன், என்ன ஆடை உடுத்துகிறேன், யாரை பார்க்கிறேன் என்று அவர்
சிந்தனையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டிருப்பதாக அவரோடு பணியாற்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது ஒரு மனவியாதி. ஆங்கிலத்தில் Obsessive Compulsive Disorder (OCD) என்று அழைக்கப்படும்.
அருண் அவர்களுக்கு இந்த வியாது முற்றிய நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அருண் ஒரு
நல்ல மனவியல் மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய
தொல்லைகளால் சவுக்கு மீடியா தனது பணியை நிறுத்தப் போவது இல்லை..’’ என்று கூறியிருக்கிறார்.
காவல் துறையும் தி.மு.க.வும் இது வரையிலும் இதற்கு பதில் அளிக்கவே
இல்லை.