Share via:
கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் திடீரென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான எதிர் கருத்துகள் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்குள்ளாக 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசும், கர்நாடக விவசாயிகளும், தமிழ்நாடு அரசைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகினறனர். அதன் ஒரு பகுதியாக நாளை (செப்.26) கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலம் முழுவதும் வருகிற 29ம் தேதியும் முழு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால், நாளை கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு லாரி டிரைவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, வடமாநிலங்களுக்கு சென்று தமிழகம் திரும்பும் லாரிகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கவும், லாரி உரிமையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.