Share via:
சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று தி.மு.க. அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டிள்ளார். அதில், ‘‘4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக தி.மு.க. அரசு மார்தட்டுகிறது. தி.மு.க. அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று தெரிவித்துள்ளார் மேலும் இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு இதுவே சாட்சி என்பது போல் இன்று சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது’’ என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே போல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘சென்னை மாநகரம், உலகளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால் ஒவ்வொரு ஆண்டு பருவமழை காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு அரசும் மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.