Share via:
234 தொகுதிகளில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரமாண்டமான இருசக்கர வாகன பிரசார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.15) தொடங்கி வைக்க உள்ளதால் தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ‘‘மாநில உரிமைகளை மீட்க அழைக்கிறார் உதயநிதி’’ என்ற முழக்கத்தோடு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரசார பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனப் பேரணியின் போது 188 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இருசக்கர வாகன பேரணி மூலம் 8,647 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் 3 வேளையும் அறுசுவை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டீஷர்ட், வாகன கொடிக்கம்பம், டிராவல் பேக், முதலுதவி சிகிச்சை மெடிக்கல் கிட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் தி.மு.க. இளைஞர் அணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நவ.15ம் தேதி தொடங்கும் இந்த பேரணி வருகிற நவம்பர் 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இப்பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் கருப்பு அல்லது ஜீன்ஸ் அணிய வேண்டும் என்றும் அவரவர் தங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலையும், வாகன காப்பீட்டு சான்று நகலையும் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் தி.மு.க. இளைஞர் அணியினர் முன்வைத்துள்ளனர்.