Share via:
ஸ்டாலின் அரசு அனுமதி கொடுத்த காரணத்தாலே மத்திய அரசு டங்ஸ்டன்
சுரங்கத்துக்கு ஏலம் விட்டது. ஆனாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த
திட்டத்தை சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கைவிடுவதாக அறிவித்திருக்கிறார் என்று
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க.வினர் பலரும் அண்ணாமலைக்கு
பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், டங்க்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை
என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம்
கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 ஹெக்டேர்
அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒன்றிய அரசு தெளிவாக்கியிருப்பதற்கு
கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மதுரை மேலூர் தாலுகா அரிட்டாப்பட்டி உள்ளடங்கிய பல கிரமங்களில்
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசின் கனிமவளத் துறை கடந்த
7.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியது. உயிர்பன்மைய முக்கியத்துவம்
மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பகுதியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்
பாதிப்புக்குள்ளாகும் என்னும் வகையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன்
அடிப்படையில், இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் கனிமவள அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை
வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உயிர்பன்மையம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதம்
உள்ள பகுதியில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஆராய
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை மாநில அரசு இந்தத் திட்டத்திற்கான அடுத்தகட்ட
அனுமதி சார்ந்த நடவடிக்கைகளை இடைக்காலமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளது. தமிழக
அரசு அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர்
நிலப்பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாச்சார பகுதியாக அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் தற்போதைய அறிவிப்பு மூலம் இந்தப் பகுதியை தவிர்த்து
மீதம் உள்ள 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாயந்த புராதானச் சின்னங்களை பாதுகாக்கும்
அறிவிப்பும் இல்லை. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில்
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.
எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிடுவதே சூழலை பாதுகாக்கும். அதுவரை மக்கள் போராட்டம்
தொடரும்…’’ என்று தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டனை மண்ணுக்குள் வைத்து என்ன செய்யப்போகிறீர்கள், அதை பாதுகாப்பாக
எடுப்பதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் பயன் கிடைக்கும் என்று
இப்போது பா.ஜ.க.வினர் அட்வைஸ் செய்துவருகிறார்கள்.