Share via:
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போதுதான்
தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என்று தேமுதிக பொதுச்செயலாளர்
பிரேமலதா பேசியிருப்பது அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமித்ஷா தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்று சப்பைக்கட்டு கட்டினாலும் தேர்தல் நெருக்கத்தில்
சிக்கல் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு துணை முதல்வர்
பதவி வேண்டும் என்று ஆசைப்படும் வகையில் பேசி இருக்கிறார் பிரேமலதா.
கரூரில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு
மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்குவது என்பது ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட
ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக
எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர்
பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்
சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான்
கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி
ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட
முடியும். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணிநேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி
விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். தனியாக
வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது’’ என்று
தெரிவித்தார்.
இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’பிரேமலதா என்றாலே பேராசை என்பதை
மீண்டும் நிரூபணம் செய்திருக்கிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது
என்று அதிமுக மீண்டும் தெளிவு படுத்திய பிறகும் வேண்டும் என்றே அவரது துணை முதல்வர்
கனவை தெரிவிக்கிறார். கூட்டணியில் முதலில் சேர்வாரா என்று பார்க்கலாம்…’’ என்று கிண்டலடிக்கிறார்கள்.