Share via:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டும், இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (செப்.27) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மத்திய அமைச்சருக்கு அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். அதோடு டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் டெங்குவைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு ஆய்வக பரிசோதனை, நோய் மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்கனே மத்திய அரசு திட்ட அமலாக்கத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை வழங்குகிறது என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துக் கொண்டார்.