Share via:
பிக்பாஸ் 7ல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் பிரதீப்புக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வெற்றியாளராக இவர் இருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவர் பிரதீப். இவர் ஆட்டத்தின் முதல் நாளில் இருந்தே நான் இப்படித்தான். இப்படித்தான் விளையாடுவேன் பேசுவேன் என்று தனது நிலையில் தீர்க்கமாக இருந்தார்.
இப்படியிருக்க கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களான, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, சரவணவிக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு, ரவீனா உள்ளிட்டோர் பிரதீப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.
இதைத்தொடர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியதுடன், கமல்ஹாசன் அவருக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப், ரெட் கார்டை பிடித்த படி தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு முன்னாள் போட்டியாளர்களான கவின், சினேகன், நிரூப் நந்தகுமார், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

