Share via:
தமிழகத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும்
தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. திராவிடக் கட்சிகளின் முதுகில் சுமந்தே பழக்கப்பட்டவர்கள்.
அதனால் சாதாரண நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனும் பா.ஜ.க.
தலைமையகமான கமலாலயமும் எப்போதும் காத்து வாங்கியே கிடக்கும்.
இந்த நிலையில் இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைவர்களான செல்வப்பெருந்தகையும்
அண்ணாமலையும் ஆளாளுக்கு அறிக்கை போர் நடத்திவருகிறார்கள்.
சமீபத்தில் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய
கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பேசியிருந்தார். இது, ஒட்டுமொத்த தமிழர்களையும்
திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயல் என்றும் மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு
கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான
கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக செல்வப்பெருந்தகை
அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு அண்ணாமலை கிண்டலாக ஒரு பதில் போட்டிருந்தார். அதில், ‘தமிழக
பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர்
அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால்,
வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும்,
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும்
பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.
எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன
என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம்
வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்
கொண்டார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் இப்போது செல்வப்பெருந்தகை, ‘காங்கிரஸ்
கட்சியின் போராட்ட அறிவிப்பை அண்ணாமலை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு
வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார். வரும் ஜூன் 4-ம் தேதிக்கு
பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை.
ஏனெனில், கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு
2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு அந்த அலுவலகத்தில்
அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார். இந்த
வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்
என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்
உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில்,
தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற
ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம்’ என்றும் பதிலடி
கொடுத்திருக்கிறார்.
இரண்டு கட்சியிலும் தொண்டர்கள் பலம் இல்லை என்பது மக்களுக்குத்
தெரியும். ஆனாலும், ஏதோ கோடிக்கணக்கில் தொண்டர்கள் இருப்பதுபோல் பில்டப் கொடுக்கிறாங்களே
என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.