Share via:
ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து வாங்கி சமைத்து சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவி உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் இருந்தபடியே ஆன்லைனில் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்யும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விற்பனையாளர்களும் கண்களை கவரும் வகையில் வண்ண மயமாக விளம்பரங்களை உலாவர செய்கின்றனர். அதிலும் தள்ளுபடி, சலுகை இருந்தால் போதும் மக்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆர்டர் செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் ஆர்டர் ஒரு மாணவியின் உயிரை பறித்துள்ளது. திருச்சி மாவட்டம், திறுவெறும்பூர் பகுதியை அடுத்துள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது மகளான ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று இரவு (செப்1)மொபைல் போனில் நூடுல்ஸ் விளம்பரத்தை பார்த்துவிட்டு ஆசையாக அதை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். சில நிமிடங்களில் அந்த நூடுல்ஸ் வீடு தேடி வர, அதனை சமைத்துசாப்பிட்டு விட்டு இரவில் உறங்கியுள்ளார். காலை பள்ளிக்கு செல்ல மாணவியை எழுப்பிய போது அவர் எழவில்லை.
இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அரியமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உயிரிழப்புக்கு காரணம் ஆன்லைனின் ஆர்டர் செய்த நூடுல்சா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.