Share via:
சென்சார் செய்யப்பட்டு திரையில் ரிலீஸ் ஆகி பெரிய பரபரப்பு இல்லாமல்
ஓடி, அதன்பிறகு ஓடிடியிலும் வெளியான அன்னபூரணி படத்துக்கு திடீரென பெரும் எதிர்ப்பு
கிளம்பியது. ஸ்ரீராமர் மாமிசம் சாப்பிட்டார் என்று பேசப்பட்ட விவகாரம் நயனுக்கு எதிரான
பிரச்னையாக மாறியது.
அதாவது ஒரு கிறிஸ்தவப் பெண் ஒருவர் எப்படி ஸ்ரீராமர் பற்றி பேசலாம்
என்பதுதான் பஞ்சாயத்து. இந்த விவகாரம் தீயாகப் பரவியதையடுத்து ஓடிடியில் இருந்து நிறுத்தப்பட்டது.
அதன்பிறகும் பிரச்னை தீராமல் இன்று ஜெய் ஸ்ரீராம் என்று பா.ஜ.க.விடம்
சரண்டர் ஆகும் சூழலுக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா. அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில்,
‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை
மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால்
எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள்
உருவாக்கினோம்.
அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள்
எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால்
சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள்
சற்றும் எதிர்பாராத ஒன்று.
மற்றவர் உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது
குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு
தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன்
செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி
இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான
நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.
எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது
நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும, மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும்
மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
கடிதத்தின் மீது ஜெய் ஸ்ரீராம் என்று அவர் குறிப்பிட்டிருப்பதை
வைத்து, பா.ஜ.க.விடம் இருந்து அவருக்கு மாபெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாலே இப்படி
சரண்டர் ஆகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.