Share via:
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 9ம் தேதி சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தில் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உச்சீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையறுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அன்றைய தினமே சட்டசபை செயலகத்தில் இருந்து தலைமை செயலாளரான சிவ்தாஸ் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீர்மானத்தின் நகலை அரசு முறைப்படி சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.