Share via:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இது வருகிற 3ம் தேதி (நாளை மறுநாள்) வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் அந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த புயல் வருகிற 4ம் தேதி சென்னைக்கு வடக்கே ஆந்திர மாநில பகுதியில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை (டிச.2) முதல் வருகிற 5ம் தேதி வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 3 மற்றும் 4ம் தேதிகளில் வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தின் போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்தும், வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்தும் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.