Share via:
தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இன்று மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட 67வது ஆண்டை கொண்டாடி வருகின்றன.
ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற தென் மாநிலங்களின் போராட்டங்கள் வலுத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்தது.
இதைத்தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அவரின் மரணத்தால் தெலுங்கு பேசும் மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்போதைய மெட்ராஸ் மாகாணமே போர்க்களமாக மாறியது.
இதன் காரணமாக 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி இந்தியாவில் மொத்தம் 14 மொழி வாரி மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்ட 67வது ஆண்டை ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் இன்று மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.
இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்தநாள் என்றும் இந்த நாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குமரியின் தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் ஏ.நேசமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதையும் நினைவுகூர்ந்துள்ளார். இத்தகைய மேன்மைமிகு தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.