Share via:
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் 41 தொழிலாளர்களையும் தற்போது பத்திரமாக மீட்டுள்ளனர்.
அதன்படி தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், சக்கரங்கள் பொருத்திய ‘ஸ்டிரெச்சர்கள்’ வாயிலாக தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டெடுத்தனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களையும் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலையிட்டு வரவேற்று அவர்களிடம் நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து மீட்புக்குழுவினருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது. மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக்குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.