Share via:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திடீரென்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு பிளவுகளும், கூட்டணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்களை திடீரென்று நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு தி.மு.க. ஆட்சியிலும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்த ஆணையம் 9 மாதங்களை கடந்துள்ள நிலையில் தமிழக அரசு எந்த பரிந்துரைகளையும் மேற்கொள்ளவில்லை.
எனவே இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சருக்கு 10 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், 6 முறை கடிதங்களையும் எழுதி அனுப்பியுள்ளார். அதன் எதிரொலியாகத்தான் நடப்பு கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவைக் கூட்டதொடர் இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
