Share via:
மெட்ரோ ரெயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீக் அவர்ஸ் மட்டுமல்லாது சாதாரண நேரத்திலும் கூட பொது மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். டிராபிக், சிக்னல் உள்ளிட்ட பிரச்சினைகள் இன்றியும், விரைவான மற்றும் சவுகரியமான போக்குவரத்துக்காக பயணிகள் மெட்ரோ ரெயிலை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் தற்போது பருவமழை பெய்து வருவதால், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முக்கிய மாற்றத்தை இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிகரித்து வரும் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் நீலம் மற்றும் பச்சை ஆகிய 2 வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் அல்லாத (பீக் அவர்ஸ்) மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று (நவ.27) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.