Share via:
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது.
இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 260க்கும் மேற்பட்டோர் அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இருப்பினும், என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். சனாதனத்தை எதிர்த்து எனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று அமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வினித் ஜிடால் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதற்கு தமிழக அரசு சார்பில், ‘‘விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இதுபோன்ற மனுக்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும், மனுதாக்கல் செய்துவிட்டு உடனடியாக ஊடகங்களிடம் பேட்டி அளிப்பதற்காகவே இவர்கள் மனுதாக்கல் செய்கிறார்கள் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் நோட்டீஸ் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.