Share via:
பட்டியலின உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி இயக்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகிய அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்தரங்கம் நடத்தினர். பத்திரிகையாளர் இரா.வினோத் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் சமூக செயற்பாட்டாளர் முத்துபிரதீபன் சாக்யா வரவேற்புரையாற்றினார்.
புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாவலர் மகிமை தாஸ் எழுச்சி பாடல்களை பாட, சமூக செயற்பாட்டாளர் மேக.பிரவீன் நெறியாளுகை செய்தார். கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன், கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே.டி.இளங்கோவன், முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.குமார், பேரா.சி.லட்சுமணன், இந்திய குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, கவிஞர் தமிழடியான், எழுத்தாளர் அருள் முத்துக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள் நலங்கிள்ளி, தனஞ்செழியன் ஆகியோர் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான உரையாற்றினர்.
இக்கருத்தரங்கின் இறுதியில் 5 தீர்மானங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் கரவொலிடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: ”உச்சநீதிமன்றம் அளித்த பட்டியலின உள் ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை ரத்து செய்யும் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீட்டில் எஸ்சி அருந்ததியர் அடைந்த பயன் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 200 ரோஸ்டர் முறை, அருந்ததியருக்கு முன்னுரிமை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என அந்த கருத்தரங்கம் வலியுறுத்தியது.
இந்த கருத்தரங்கில் பெங்களூரு, தங்கவயலை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக கலந்துகொண்டனர்