Share via:
அமைச்சர் பொன்முடியை அமைச்சராக்கியே தீருவேன் என்று உச்ச நீதிமன்றம்
வரையிலும் போய் அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதோடு கவர்னரிடமே,
‘தேர்தல் பரப்புரைக்குக் கிளம்புகிறேன்’ என்று சொன்னதும், ‘ஆல் த பெஸ்ட்’ என்று வாழ்த்துரையும்
வாங்கியிருக்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் இதனை பேசிய ஸ்டாலின், ‘நான் இங்கு
தேர்தல் பரப்புரையைத் தொடங்கவில்லை, ஆளுநர் மாளிகையிலே தொடங்கிவிட்டேன்’ என்று தெறிக்க
விட்டுள்ளார். அதோடு, பெரியார், அல்லா குறித்து பாடல் பாடிய டி.எம்.கிருஷ்ணாவுக்கு
எதிராக எழுந்துள்ள சர்ச்சையில், கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் வெளியிட்டிருக்கு அறிவிப்பில், ‘’சங்கீத கலாநிதி’ விருதுக்குத்
தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப்
பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும்
விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும்
பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில்
போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை
வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட
மாட்டார்கள். திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும்
அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி
நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது.
அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்!
விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய
தேவை’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பரப்புரைக்கு நடுவில் இதுபோன்ற விஷயங்களிலும் தன்னுடைய
கருத்தைத் தெரிவித்து இந்து மத ஆதரவாளர்களை மிரட்டிவிட்டார் என்று தி.மு.க.வினர் குஷியாகிறார்கள்.