Share via:
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பியுடன் சேர்த்து சட்டையில் பட்டன் கேமராவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆந்திர, குஜராத், மேற்குவங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தற்போது சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் 900 கிராம் எடை கொண்ட குளிர்விக்கும் தொப்பி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொப்பியை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரம் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ள மின்விசிறி இதில் பொருத்தப்பட்டிருக்கும். அதோடு சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியை போலீசார் தங்கள் இடுப்பு பகுதியில் மாட்டிக் கொள்ள முடியும்.
பேட்டரி உதவியுடன் தொப்பிக்குள் சுழலும் இந்த மின்விசிறி வெயிலில் தவிக்கும் போக்குவரத்து போலீசாருக்கு நல்ல குளிர்ச்சியான காற்றைக் கொடுக்கும். சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த தொப்பியின் தேவையை பொறுத்து அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் வழங்கப்பட உள்ளது.
மேலும் ஐதராபாத்தைத் தொடர்ந்து சென்னை போலீசாருக்கும் சட்டையில் அணியும் கண்காணிப்பு கேமராவும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேமரா மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது எளிதாகும்.