Share via:
பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சரை சந்தித்து பேசினால் கூட்டணியை பற்றி பேசினோம் என்று அர்த்தமாகிவிடுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக கூறிவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது 2 கோடி தொண்டர்களின் முடிவு என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் எங்கள் சார்பில் முன்வைக்கப்படவில்லை. கூட்டணி நீடிக்கும் என்று வி.பி.துரைசாமி கூறியது பற்றி அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று செய்தியாளரிடம் எடப்பாடி பழனிசாமி காரசாரமாக கூறினார்.
எந்தெந்த கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க. கூட்டணியில் சேரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், மத்திய மந்திரி சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகத்தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தி.மு.க. அமைச்சர்கள் கூடத்தான் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்திக்கிறார்கள். அப்படி சந்தித்தால் கூட்டணி என்று அர்த்தமாகிவிடுமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பேட்டியின் வாயிலாக அ.தி.மு.க. கூட்டணியில் இனி பா.ஜ.க. இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லவே இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
