Share via:
வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக வித்தியாசமான பாணியில் அணுக இருப்பதாக
சொல்லப்படுகிறது. டெல்லி பாணியில் முக்கியமான திமுக புள்ளிகளை எல்லாம் தேர்தல் நேரத்தில்
ஜெயிலுக்குள் அனுப்பும் திட்டம் தயாராகிறது.
அந்த வகையில் மூன்று முக்கியப் பிரமுகர்களை சிறைக்கு அனுப்பத்
திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களில் முதல் நபராகச் சிக்கியிருக்கிறார் ஐ.பெரியசாமி.
ஏற்கெனவே செந்தில்பாலாஜி வசமாக சிக்கியிருக்கிறார். அடுத்தபடியாக நேருவும் மாட்டுவார்
என்று சொல்லப்படுகிறது.
இப்போதுஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரியசாமி தலைமைக்கும் மிகவும் நெருக்கமானவராக
இருக்கிறார். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக
தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் கணக்கு போடுவதில் கில்லாடி. அதனாலே அவர் குறி வைக்கப்பட்டுள்ளதாக
சொல்லப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக சென்னை பசுமை வழிச் சாலை மற்றும் திண்டுக்கல்
இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் இருக்கும் ஐ.பெரியசாமி
அறையிலும் சோதனை நடந்து வருகிறது. இதுதவிர சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் உள்ள அவர்
தொடர்புடைய பல இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக 2006 – 2011 வரை அமைச்சராக இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.1 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012ஆம் ஆண்டு அவர் மீது
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து
திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டதை கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து
செய்ததோடு, மீண்டும் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச
நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
இதேபோல வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட
வழக்கில் ஏற்கனவே 2022ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அலுவலத்தில் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி
8 மணி நேரம் வரை விளக்கம் அளித்திருந்தார். அப்போது, சட்ட விதிகளுக்கு மாறாக எந்த இடத்திலும்
தான் செயல்பட்டது இல்லை என்றும், பல முறை அமைச்சராக இருந்தாலும் சென்னையில் ஒரு சதுர
அடி நிலம் கூட எனக்கு சொந்தமானது இல்லை எனவும், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ளத்
தயார் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும், வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாகவும்
ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு உள்ளது.
இவற்றில் எந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்
கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.
இதே பாணியில் அடுத்து நேருவும் சிக்குவார் என்றே சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே துரைமுருகன், செந்தில்பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன்
போன்ற பலரும் இப்போதே உதறலில் இருக்கிறார்கள்.