Share via:
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போதிலும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மிகவும் சோர்வாக காணப்பட்ட முதலமைச்சர் மக்கள் நலப்பணியே முக்கியம் என்று உரை நிகழ்த்தி தீர்மானங்களை நிறைவேற்றியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டமசோதாக்களை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு நிறைவேற்றி மீண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட தயாராக உள்ளது.
அதன்படி மொத்தம் 10 மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்பட்டதில் 8 மசோதாக்கள் தி.மு.க.வாலும், 2 அ.தி.மு.க.வாலும் கொண்டு வரப்பட்டது.
தனித்தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மீன்வள பல்கலைக்கழத்திற்கு மறைந்த முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பெயரை மாற்றம் செய்ய தி.மு.க. திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதை தி.மு.க. முற்றிலும் மறுத்துள்ளது.
இக்கருத்தை முன்வைத்தே தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க.வினர் தரப்பு சொல்வதை ஓ.பன்னீர்செல்வம் கிண்டல் செய்து பேட்டி அளித்துள்ளார்.
எதற்காக வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரியாமலேயே வெளிநடப்பு செய்கிறார்கள். மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அம்மாவின் பெயரே நீடிக்கும். அம்மா கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது என்பதை தெரியாமலேயே வெளிநடப்பு செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. கொடி மற்றும் பெயரை பயன்படுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஐயப்ப பக்தர் போல் வேட்டி அணிந்துவந்தார். ஆனால் அவரது ஆதரவாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாததால் அவர்கள் அ.தி.மு.க. கறை வேட்டி அணிந்து வந்தனர்.
அ.தி.மு.க. வெளிநடப்பு செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களுடன் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி அரசியல் சாணக்கியத்தனத்தை வெளிப்படுத்தியது.
அதன்படி 10 மசோதாக்கள் இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.