Share via:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது.
துப்பாக்கிசுடுதல் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களையும், துடுப்பு படகு போட்டியில் 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களையும், கிரிக்கெட் போட்டியில் 1 தங்கப்பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை பெற்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதன்படி மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று (செப்.25) நடைபெற்ற நிலையில் இலங்கை அணியை டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய பெண்கள் அணி 116 ரன்களை குவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களில் சுருண்டது. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி இலங்கையை வென்று இமாலய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

