Share via:
திராவிட மண்ணில் பாஜக காலூன்ற முயற்சி மேற்கொள்வதை எம்ஜிஆர் காலத்து
அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பது
பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று
தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்த விவகாரம்
மீண்டும் அதிமுக கூட்டணியில் குட்டையைக் குழப்பியிருக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் ஒன்றாக கைகோர்த்து கட்சியை
வழிநடத்தி சென்று கொண்டிருந்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக பாஜகவுடன்
கூட்டணி வைத்தது பற்றி அன்வர் ராஜா விமர்சித்து பேசி இருந்தார். இது கட்சி தலைமைக்கு
பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. அதோடு பாஜக கூட்டணி பற்றி பேசியிருந்த அன்வர்
ராஜா அவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் இரவோடு
இரவாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அன்வர்
ராஜா அமைதியாக இருந்து மீண்டும் கட்சிக்குள் வந்துவிட்டார். ஆனால், மீண்டும் ஒரு பேட்டி
கொடுத்து சிக்கலில் மாட்டியிருக்கிறார். இன்று இந்து தமிழ் நாளிதழுக்கு அதிமுக முன்னாள்
அமைச்சரும், தற்போதைய அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா அளித்திருக்கும்
பேட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிக்கிறது.
இதனை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேள்வி
எழுப்பப்பட்டது அதற்கு பதிலளிக்கையில் தமிழகத்தில் காலூன்ற துடிப்பது பாஜகவின் உடைய
எண்ணமாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடைபெறாது என்பது என் தனிப்பட்ட கருத்து எனப்
பதிலளித்திருக்கிறார்.
மேலும் பாஜகவுடன் எந்த காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு,
மீண்டும் அதே கட்சியுடன் இணைந்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, கூட்டணி என்பது தேர்தல்
காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இது வெற்றியை அடிப்படையாகக்
கொண்டு தான் அமைக்கப்படும். கொள்கையின் அடிப்படையில் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும்
எடுத்துக் கொண்டால் பாஜகவுடன் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதுபோலத்தான்
நாங்களும் கூட்டணி வைத்தோம். இது இயல்பான ஒன்று தான் என்று பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே கூட்டணி தொடர்பாக கட்சியினர் யாரும் பேசக்கூடாது என்று
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். கட்சி தலைமை
மட்டுமே கூட்டணி பொறுத்து பேசும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தார். இதனால் அதிமுக தலைவர்கள்
இதுபற்றி பேசாமல் இருந்தனர். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது கூட எடப்பாடி பழனிசாமி
பார்த்துக் கொள்வார் என்று நழுவிச் சென்றனர். ஆனால், இந்த பேட்டியில் தன்னுடைய கருத்து
என்று பேசியிருக்கிறார். தனிப்பட்ட கருத்து என்று கூறப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க
வாய்ப்பில்லை என்கிறார்கள். பார்க்கலாம்.