Share via:

தமிழகத் தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் அண்ணாமலை அடங்குவதாக
இல்லை. மதுரையில் அமித்ஷா முன்னிலையில் மாஸ் காட்டியதன் தொடர்ச்சியாக மோடிக்கு ஒரு
கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு மதுரையில் கலவர அரசியலுக்குத் தயாராகிறார். இந்த விவகாரத்தில்
அண்ணாமலையை அடக்கி நயினார் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பது தான் பாஜக டாக்.
மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில்,
‘’மதுரையில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசியிருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்
என்றால் தொகுதிப் பங்கீடு அந்த வகையில் இருக்க வேண்டும். பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக
உயர்ந்துள்ளது. ஆகவே, மூன்றில் ஒரு பங்கு சீட் பாஜகவுக்குக் கிடைத்தால் மட்டுமே கூட்டணி
ஆட்சி அமைக்க முடியும்’’ என்று கூறியிருக்கிறாராம். அதாவது 78 சீட் வாங்குவதில் அண்ணாமலை
உறுதியாக இருக்கிறாராம்.
அதோடு இப்போது நைனார் தலைவராக இருக்கையில் தான் அரசியல் பேசினால்
சிக்கலாகும் என்பதால் முருகன் மாநாட்டைக் கையில் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. இதுகுறித்து
அவர், ‘’தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகப் பெருமான் ஆலயங்களை சீரமைக்க
வலியுறுத்தியும், நமது பண்பாட்டையும், ஹிந்து தர்மத்தையும் காத்திடவும், நமது கோவில்களை
மீட்டிடவும், உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து,
மதுரையில் ‘குன்றம் காக்க, கோயிலை காக்க’ என்ற பெயரில், முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து
முன்னணி சார்பில் அதன் மாநிலத் தலைவர், ஐயா காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில்,
வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ளது.
திமுக உள்ளிட்ட கட்சிகள் போலி மதச்சார்பின்மை பேசி, ஹிந்து மதத்தைச்
சார்ந்த மக்களையும், பக்தர்களையும், கோவில்களையும், தொடர்ந்து பாரபட்சமாக நடத்தி வருவதோடு,
கோவில் சொத்துக்களை, கோவில்களுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய அடிப்படை வசதிகள் கூடச்
செய்து கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர். இதனை எதிர்த்து, பக்தர்கள் அனைவரும்
ஒருங்கிணைந்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நமது ஆலயங்கள், முறையாகப் பராமரிக்கப்படுவதோடு, பக்தர்களுக்குத்
தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். கோவில்களில் இருந்து கிடைக்கும்
வருமானம், கோவில்களின் மேம்பாட்டிற்கும், பராமரிப்பிற்கும் முறையாகப் பயன்படுத்தப்பட
வேண்டும். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி,
முருக பக்தர்கள் மாநாட்டினை முன்னெடுத்திருக்கும் ஹிந்து முன்னணி இயக்கத்திற்கு பாராட்டுக்கள்.
பக்தர்கள் அனைவரும், வரும் ஜூன் 22 அன்று, மதுரையில் பெருவாரியாகக் கூடி, முருக பக்தர்கள்
மாநாட்டினை, மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று அழைப்பு விட்டுள்ளார்.
பா.ஜ.க.. தலைவர் பேச வேண்டியதை எல்லாம் அண்ணாமலை பேசுவதை பாஜக
சீனியர்களும் நயினார் ஆதரவாளர்களும் கொஞ்சமும் ரசிக்கவில்லை. மதுரையில் அண்ணாமலையை
டம்மி செய்யவில்லை என்றால் நயினார் பதவியில் இருப்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்
என்கிறார்கள்.
அதேநேரம் திமுகவினர், ‘’மாநில நலன், கல்வி தொகை, GST நிலுவைத்
தொகை போன்ற பிரச்னைகளுக்காக எப்போது போராட்டம் நடத்துவீங்க… கடவுளை பாதுகாக்க அவருக்குத்
தெரியும். நீங்கள் பாதுகாப்பு தரப்போறீங்களா??? மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம்….
இது தமிழ்நாடு…’’ என்று எச்சரிக்கிறார்கள்.
