Share via:

பா.ஜ.க.வுடன் கூட்டணி உள்ளது. ஆனால், கூட்டணி அரசு இல்லை என்று
எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், பா.ஜ.க. ஏரியாவில் பெரும் பதட்டம் நிலவியது.
அமித்ஷா பேச்சை அவமானப்படுத்துகிறார், இந்த நேரம் அண்ணாமலை தலைவராக இருந்தால் எடப்பாடி
பழனிசாமியை லெஃப்ட் ரைட் வாங்கியிருப்பார் என்று கொந்தளித்தார்கள். இந்நிலையில் புதிய
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்ன சொல்லப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு
நிலவியது.
இது குறித்து பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், ‘கூட்டணி குறித்து
முடிவெடுத்தது எங்களது அகில இந்திய தலைமையும் அண்ணா தி மு க தலைமையும் தான். எனவே அது
குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது. அதை அவர்கள் பேசி முடிவெடுத்துக்கொள்வார்கள்’
என்று சொல்லி பந்தை அமித்ஷா பக்கம் தள்ளிவிட்டார். அதோடு, இப்போது கூட்டணி அரசு குறித்து
பேச வேண்டிய அவசியம் இல்லை. இப்போதைய நிலையில் 150க்கு மேற்பட்ட இடங்களை வெல்லும் நிலையில்
இருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.
இதில் மேலும் கட்சிகள் சேரும் பொழுது இன்னும் வலுப்பெறும். இன்னமும்
கூட்டணி முடிவுகள், வெற்றி வாய்ப்பு போன்றவை எல்லாம் பார்த்த பிறகே கூட்டணி அரசு பற்றி
பேச முடியும். அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்துகொள்வோம்’’ என்று பவ்யமாகப்
பேசி முடித்துவிட்டார்.
அதேநேரம், அண்ணாமலை ஆட்கள் இந்த விவகாரத்தை ரொம்பவே சீரியஸாகப்
பார்க்கிறார்கள். இது குறித்து பேசுபவர்கள், ‘’அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு
என்று தனி மரியாதையும் ஓட்டு வங்கியும் உருவாக்கி வைத்திருக்கிறார். அதை நயினார் உடைத்துவிடுவார்
போலியிருக்கிறது. வரும் தேர்தலில் பா.ஜ.க.வின் வலிமையைக் காட்டும் வகையில் சீட்டுகளை
வாங்க வேண்டும்.
குறிப்பாக 2024 ல் வாங்கிய வோட்டு சதவீதத்தின் அடிப்படையிலேயே
2026 ல் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும். கடந்த 2024 தேர்தலில் அ.தி.மு.க. 20% வாக்குகளும்
பா.ஜ.க. 18 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு
120 சீட்டும் பா.ஜ.க.வுக்கு 114 சீட்டுகளும் கிடைக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை
என்றால் அ.தி.மு.க.வை தனிமைப்படுத்தி விடலாம். மீண்டும் ஸ்டாலினே 5 வருடங்கள் ஆட்சியில்
இருக்கட்டும்’’ என்று கொதிக்கிறார்கள்.
கூட்டணியை உடைப்பதில் அண்ணாமலை ஆர்மி ரொம்பவே ஆர்வமாக இருக்கிறது.
இதை நயினார் நாகேந்திரன் கட்டுப்படுத்தவில்லை என்றால் சிக்கல்தான்.