Share via:
நடிகர் சிவக்குமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு இணையதளம் வாயிலாக அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் தமிழக அரசின் முழு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கேப்டனின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா மற்றும் கேப்டனின் 2 மகன்களுக்கும் ஆறுதல் தெரிவித்து பேசினார்கள்.
வெளிநாடு சென்றிருந்ததால் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக நடிகர் சிவகுமார் மிகுந்த மனவேதனையுடன், கேப்டனின் மனைவி பிரேமலதாவிடம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இன்று (ஜன.5) தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற ரவீந்திரநாத் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.