Share via:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அது தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில், இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

