Share via:
காசா மருத்துவமனைக்கு கீழ் ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தரைவழி, வான்வழி தாக்குதல்களால் காசா நகரமே முற்றிலும் மயானபூமியாக காட்சியளிக்கிறது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பலியாவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் காசா மருத்துவமனைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக குற்றம்சாட்டி வந்த இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல்களை நடத்தியபடி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறி அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மருத்துவமனைக்கு உள்ளே 10 மீட்டர் ஆழத்தில் 55 மீட்டர் நீளத்திற்கு இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளதாகவும், இந்த சுரங்கப்பாதையை ஹமாஸ் அமைப்பினர் பதுங்குமிடமாக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி வருகிறது.

