Share via:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திடீரென்று சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு தமிமுன் அன்சாரி கூறும்போது, ‘‘இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறோம். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது துணிச்சலான முடிவு என்று எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட நாங்கள், எங்களுடைய கூட்டணி குறித்து வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கட்சிக் கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். மேலும் இது அரசியல் சந்திப்பு இல்லை என்றும் தமிமுன் அன்சாரி திட்டவட்டமாக தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
