Share via:
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் புலம் பெயர் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் இவரது 5 வயது மகளை அசஃபக் அலாம் என்ற இளைஞர் சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தான். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் கடித்து குதறியது போன்ற காயங்கள் இருந்ததாக அறிக்கை வெளியானது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
நாட்டையே உலுக்கிய சிறுமியின் படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அசஃபக் அலாமை கைது செய்து 26 நாட்களில் விசாரணை நடத்தி 30 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த 110வது நாளில் குற்றவாளியான அசஃபக் அலாமுக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

