Share via:
ஆன்லைனில் தொடர்ந்து கேம் விளையாடி வந்த 17 வயது சிறுவன், அதில் வரும் கேரக்டராக தன்னை நினைத்துக் கொண்டதன் விளைவாக மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவன் தன்னுடைய செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக இரவு நேரத்தில் உறங்காமல் தொடர்ந்து கேம் விளையாடியுள்ளான். இதனால் சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கை, கால்களும் நிலையாக இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோர் சிறுவனின் போக்கில் பல்வேறு மாற்றங்கள் இருப்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் மனநலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிறுவன் ஆம்புலன்சில் ஊழியர் உள்ளிட்ட அனைவரிடமும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆன்லைனில் வரும் கேம் கேரக்டராக சிறுவன் தன்னை நினைத்துக் கொண்டதன் விளைவே இந்த சோக சம்பவம்.
செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் மிகவும் உன்னிப்பாக கண்காணிப்பதோடு நிறுத்திவிடாமல், குழந்தைகளை செல்போன் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் புலப்படுகிறது.
