Share via:
நல்ல கதை இருந்தால் நான் நடிக்கத் தயார் என்று கனவுக்கன்னியான நடிகை ரம்பா தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை ரம்பா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட அனைத்து உச்ச நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக உலா வந்தார். இவர் தனது 20 வருட திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து திருமணம், கணவர், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருக்கும் நடிகை ரம்பா நடிப்பில் இருந்து விலகி தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரம்பா பேட்டி ஒன்றில் கூறும்போது, ‘‘திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கனவுக்கன்னி என்கிற பட்டம் கிடைக்கும். அது எனக்கு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. நான் நடித்த காலத்தில் சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு சில டி.வி.ஷோக்களில் தலைகாட்டிய நான், குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அதனையும் தவிர்த்துவிட்டேன்.
இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என ஒரு நல்ல அம்மாவாகவும், மனைவியாகவும் இருந்தேன். இனி ரசிகர்களை குஷிபடுத்த நல்ல கதைகளை கேட்டு வருகிறேன் என்றார்.
மேலும் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் சினிமாவை நான் நன்றாக கவனித்து வருகிறேன். தற்போது சினிமாவில் டிரெண்ட் மாறி இருப்பதால், எனக்கு ஏற்ற மாதிரியான கதைகளை தேடி நடிக்க முடிவெடுத்துள்ளேன். எனவே என்னை சீக்கிரமாகவே திரையில் பார்க்கலாம்’’ என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கனவுக்கன்னி ரம்பா. திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த நடிகை லைலாவும் தற்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரம்பாவும் களம் இறங்கி இருப்பது 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட்தான்.

